Ads

சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாள் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை

சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிக்கை . 

“ சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாள் ” 

“ திராவிட இயக்கம் என்பது சாமானியர்கள் உயர்வதற்காக , சாமானியர்களால் சரித்திரம் படைக்கப்பட்ட - தொடர்ந்து படைக்கப்படும் உயரிய வரலாற்றைக் கொண்டது " என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள் . இந்த வரலாறு இன்று நேற்றல்ல ; நூற்றாண்டுத் தொடர்ச்சியைக் கொண்டது ஆகும் . 1916 - ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரால் தொடங்கப்பட்ட நீதிக்கட்சியானது அன்றைய சென்னை மாகாணத்தில் சமூகநீதி , தீண்டாமை ஒழிப்பு , ஒடுக்கப்பட்டோர் உரிமை , சுயாட்சிக் கருத்துகள் ஆகியவற்றுக்காக குரல் கொடுத்தது . 


1920 - ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் வென்ற நீதிக்கட்சி ஆட்சியானது இதனை பல்வேறு அரசாணைகள் மூலமாகச் செயல்படுத்தியது . அதில் மிகமிக முக்கியமான அரசாணை வெளியிடப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகிறது . அதுதான் தமிழ்ச்சமுதாயத்தின் பல தலைமுறைகளை மாற்றிய சமூகநீதி அரசாணை ஆகும் . 16.9.1921 - ஆம் நாள் அன்றைய நீதிக்கட்சி ஆட்சியின் முதலமைச்சரான பனகல் அரசர் காலத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . " அரசுப்பணிகளில் குறிப்பிட்ட வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமானால் அது நாட்டுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும் . 

அனைத்துச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும் " என்ற அடித்தளத்தில் அந்த அரசாணை வெளியிடப்பட்டது . இதுதான் சமூகநீதிக்கான அடித்தளம் ஆகும் . அதிலிருந்துதான் சமூகநீதி வரலாற்றின் மாபெரும் பயணம் தொடங்கியது . நூறு ஆண்டுகள் கழித்து செப்டம்பர் 16 - ஆம் நாளான இன்று வெள்ளுடை வேந்தர் தியாகராயர் , சமுதாய சீர்திருத்த மருத்துவர்களான நடேசனார் , டி.எம்.நாயர் , கடலூர் ஏ.சுப்பராயலு , பனகல் அரசர் , அமைச்சர் எஸ்.முத்தையா ,பி.டி.இராஜன் ஆகியோரை நினைத்துப் பார்க்கிறேன் .

 இவர்கள் உள்ளிட்ட பெருமக்கள் அன்று தொடங்கி வைத்த சமூகநீதிப் புரட்சிதான் தமிழ்ச்சமுதாயத்தின் இலட்சக்கணக்கானவர்கள் இல்லங்களில் விளக்கேற்றக் காரணமாக அமைந்தது . இந்த உத்தரவை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்ற தரவரிசைப் பட்டியலைப் போட்டுக் கொடுத்தார் அன்றைய அமைச்சர் எஸ்.முத்தையா அவர்கள் . அதனால் தான் , ' இனிப் பிறக்கும் பிள்ளைகளுக்கு முத்தையா என்று பெயர் சூட்டுங்கள் ' என்றார் தந்தை பெரியார் அவர்கள் . இந்த சமூகநீதி அரசாணையானது தமிழ்நாடு எல்லையைக் கடந்து இந்தியா முழுவதும் இன்று வெற்றி நடைபோட்டு வருகிறது . 

இத்தகைய அகில இந்தியப் புரட்சிக்குக் காரணமான அனைவரையும் இந்த நேரத்தில் வணங்குகிறேன் . திராவிட முன்னேற்றக் கழக அரசானது , இத்தகைய சமூகநீதிப் பயணத்தின் அடுத்தகட்டத்தை இன்று முதல் அறிமுகம் செய்ய இருக்கிறது . சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி இருக்கிறது . ஆனால் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க முடிவெடுத்துள்ளோம் .

 கல்வி , வேலைவாய்ப்பு , பதவிகள் , பதவி உயர்வுகள் , நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக , முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இக்குழு கண்காணிக்கும் ; வழிகாட்டும் ; செயல்படுத்தும் . சரியாக நடைமுறைப்படுத்த படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்யும் . இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் . 

இதில் அரசு அதிகாரிகள் , கல்வியாளர்கள் , சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள் . சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளில் சமூகநீதிக் கண்காணிப்புக்குழுவை அமைப்பதில் பெருமை அடைகிறேன் . எல்லோர்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நடக்கட்டும் இந்த வையம்