Ads

பணிநிரந்தரம், முதல்வரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்:

 பணிநிரந்தரம், முதல்வரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்:

அரசு பள்ளிகளில் ரூபாய் 10ஆயிரம் தொகுப்பூதியத்தில் 12ஆயிரம் ஆசிரியர்கள் 10ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார்கள்.


இவர்கள் திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிபடி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

முதல்வர் பதவி ஏற்கும் முன்பே கடந்த ஆண்டு மே 3ம் தேதி அன்று சுகாதாரத்துறையில் 1,212 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரம் செய்து விடியலை கொடுத்தார்.

தொடர்ந்து பட்ஜெட் மானிய கோரிக்கையில் கதர் கைத்தறி துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தோரை நிரந்தரம் செய்ய அறிவிக்கப்பட்டது.

வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்கள் நிரந்தரம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறையில் சிவாச்சாரியர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் நிரந்தரம் என அறிவிக்கப்பட்டது.

அதுபோலவே, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் இருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி. செந்தில்குமார் கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 300க்கும் மேல் நிறைவேற்றி சாதனை புரிந்து உள்ளார்.

181-வது உறுதிமொழியான பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் வாய்மொழி அறிவிப்பாகவே உள்ளதால், இலவு காத்த கிளியாக தவித்து வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வர, சுற்றுப் பயணங்களில் நேரில் கோரிக்கை மனு கொடுத்து வருகிறோம்.

மேலும் பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்களையும் இதேபோல் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தி வருகிறோம்.

சட்டசபையிலும் கொமதேக பொதுச்செயலாளர் திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன், பாமக தலைவர் பெண்ணாகரம் எம்எல்ஏ கோ.க.மணி, தவாக தலைவர் பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன், மார்க்சிஸ்ட் கட்சி கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ மா.மாரிமுத்து ஆகியோரும் பணி நிரந்தரம் குறித்து பேசி உள்ளார்கள்.

2022 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிமுக ரெ.வைத்திலிங்கம் ஒரத்தநாடு எம்எல்ஏவிற்கு, பதில் தெரிவித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தேர்தல் அறிக்கைபடி செய்வோம் என்றார்.

பணிநிரந்தரம் செய்வோம் என பள்ளிக்கல்வி அமைச்சர் தனது அறிக்கை, பேட்டியில் தெரிவித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.இதனை அரசாணையாக்க வேண்டும்.

2012 ஆம் ஆண்டு நியமனம் செய்த 16ஆயிரத்து 549 பேரில்,பணிநிரந்தரம் கனவோடு 4 ஆயிரம் பணியிடங்கள் மரணம், 58 வயது பணிஓய்வு காலியிடமாகிவிட்டது.

இப்போதும் ஆயிரம் பேருக்கும் மேல் பணி ஓய்வை நினைத்து நிலையில் கவலையில் உள்ளார்கள்.

எனவே விரைவில் நிரந்தரம் செய்து அனைவரின் அச்சத்தையும் போக்கிட வேண்டுகிறோம்.

தற்போது 12 ஆயிரம் பேருக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் கொடுக்க அரசுக்கு ரூ.13 கோடி செலவு பிடிக்கிறது.

இதை இடைநிலை ஆசிரியர் நிலையில் பணியமர்த்த மாதம் ஒன்றுக்கு மேலும் ரூ.20 கோடி செலவிட நேரும்.

இதை இந்த வேலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் விதவைகள், ஏழைகள் நிலை உயர அரசு மனிதாபிமானத்தோடு செய்ய வேண்டுகிறோம் என்றார்.